Friday, September 24, 2010

அம்மாவை தங்களது ‘ரோல் மாடல்’ ஆக குழந்தைகள் பார்க்கின்றனர்.

குழந்தைகள் படிப்பில் தந்தையை விட தாயின் வழியை பின்பற்றுகின்றன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபற்றி இங்கிலாந்தில் பேராசிரியர் அயன் வாக்கர் தலைமையில் நடந்த ஆய்வில் வெளியான தகவல்கள்:

பொதுவாக குழந்தைகள் அம்மாவின் நிழலில் வளர்வதால் அவரிடம் ஈர்ப்பு அதிகமாகிவிடுகிறது. அப்பாக்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்வதாலும், பெரும்பாலும் வீட்டில் இல்லாமல் போவதும் தாயின் தயவை தேடி குழந்தைகள் செல்ல காரணம். சிறு வயதில் ஏற்படும் இதுபோன்ற தாக்கங்கள் பெரியவர்களானாலும் மனதில் பதிந்து விடுகின்றன.

அம்மாவை தங்களது ‘ரோல் மாடல்’ ஆக குழந்தைகள் பார்க்கின்றனர். அம்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவர்களை கவர்கிறது. இது படிப்பிலும் பிரதிபலிக்கிறது. இதோ, லண்டனில் 13 ஆண்டுகள் 43,000 இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இதுதான் வெளிப்பட்டுள்ளது.

‘குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது, குடும்பத்துக்குள் தங்களது சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வது உட்பட எல்லாவற்றிலும் அம்மாவின் பிரதிபலிப்பு வெளிப்படுகிறது. இந்த விஷயத்தில் தாய், மகள் உறவு மிகவும் வலிமையாக உள்ளது.

ஆனால், தாய், மகன் உறவில் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது. அம்மாவை விட அப்பா அதிகமாக படித்திருந்து, அதிகமாக சம்பாதித்தாலும் அம்மாவின் படிப்பும், செயல்களும்தான் குழந்தைகளுக்கு பிடித்து விடுகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகள் அம்மாவை பின்பற்ற பாலின சமத்துவமும் ஒரு காரணம்’ என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு இசை அதிக நன்மை அளிக்கிறது.

இசையானது குழந்தைகளின் மூளை ஒலி நுண்ணுணர்வுத் திறனை அதிகரிக்கிறது, அதன் மூலம் அவர்களது மொழியைக் கற்கும் திறனை மேம்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொழியறிவு என்கிறபோது அதில் பேச்சும் அடக்கம். இது தொடர்பான ஆய்வை அமெரிக்காவின் சிகாகோ நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் மேற்கொண்டனர்.

அதில், மூளையின் அறிவு வளர்ச்சி நிலையில் இசையானது அதிகப் பலனளிப்பதாகக் கண்டறிந்தனர். அதிலும் குழந்தைகளுக்கு இசை அதிக நன்மை அளிக்கிறது. குறிப்பாக, கற்றல் குறைபாடு மற்றும் `ஆட்டிச’ பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு. இசைத் திறனுக்கும், இசை முறைமைகளைக் கிரகிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இசைக் கருவியை வாசிப்பது, மொழியைக் கற்கும் குழந்தையின் திறனில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதும் தெரியவந்திருக்கிறது.

ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்த பேராசிரியை நினா கிராஸ் கூறுகையில், இசைக் கருவியை வாசிப்பது, மூளைத் தண்டின் தானியக்கச் செயல்முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூளையின் கீழ்ப் பகுதியான இது, சுவாசித்தல், இதயத் துடிப்பு, ஒலிகளுக்கான `ரியாக்ஷன்’ ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிப்பதாகும். அவர் மேலும் கூறுகையில், “இசை வாசிப்பது, ஒலி சம்பந்தப்பட்ட திறனைத் தூண்டி வளர்க்கிறது. அதாவது ஒருவரது சொந்த இசைக் கருவியின் ஒலி, அதன் இனிமை, `ரிதம்’ ஆகியவற்றை ஈர்க்கும் திறனை.

இது, சத்தமான வகுப்பறைகளில் பேச்சை வளர்த்துக் கொள்வதற்கு குழந்தைகளுக்கு உதவும். குரலில் சிறுசிறு மாற்றங்களை, ஏற்ற இறக்கங்களை செய்வதன் லம் குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்துவது என்ற பேச்சு ணுக்கத்தைத் துல்லியமாக அறிய குழந்தைகளுக்குக் கை கொடுக்கும்” என்று விளக்கமாகத் தெரிவிக்கிறார். `ஆட்டிசத்தால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகள் இசைக்கு நன்றாக பதில் செயல்பாட்டைக் காட்டுகிறார்கள், அவர்கள் இசையை விரும்புவது நன்றாகத் தெரிகிறது என்று அமெரிக்க `ஆட்டிச’ கழகத்தின் பேச்சாளர் பெண்மணி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “குழந்தைகள் தொடர்புகொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் கலந்துரையாடவும், `ரிலாக்ஸ்’ ஆகவும், உணர்வுகளையும் வெளிப்படுத்தவும் இசை உதவுகிறது என்பது தெரிகிறது” என்றார். இசைக்கு பல இனிய, நன்மை தரும் தன்மைகள் உண்டு, நோயாளிகளுக்கு நலமளிக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அது குழந்தைகளின் மொழியறிவை, மொழித் திறனை வளர்க்கவும் உதவுகிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.